Thursday, 22 September 2011

ஆஸ்திரேலியாவில் விநாயகரை கேலி செய்து நாடகம் : இந்து அமைப்புகள் கண்டனம்


ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது. இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது.

விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது. அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ் கூறும் போது, இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது.

No comments: