சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘.
பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உச்சி மாநாட்டின் ஊடாக சிறிலங்கா இன்னொரு இராஜதந்திர வெற்றியையும் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்தும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் தமது சம்மதத்தைத் தெரிவித்ததானது, 'உண்மையில் அவமானமான' செயல் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தற்போது இடம்பெற்று முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் குறிப்பிட்ட ஒரு மனிதஉரிமை அமைப்பின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.
அதாவது 'மக்களிற்கான பொதுநலவாயம்: சீர்திருத்தத்தை துரிதப்படுத்த வேண்டிய நேரம்' என்ற தலைப்பில் பிரபலமான மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று பொதுநலவாய அமைப்பு நாடுகளின் அரச தலைவர்களின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் உறுப்பு நாடுகளில் இடம்பெறும் ஜனநாயக, சட்ட நடவடிக்கை மற்றும் மனிதஉரிமை ஆகியவற்றில் இடம்பெறும் தீவிர மீறல்கள் தொடர்பாக நன்கு ஆராயப்பட்ட தகவல்களை பொதுச்செயலாளருக்கும், பொதுநலவாய அமைப்பின் செயற்பாட்டுக் குழுத் தலைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக- ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமை விவகாரம் ஆகியவற்றுக்கான பொதுநலவாய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பரிந்துரை தொடர்பாக பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட போது தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் சில நாடுகள் இதை மிகப் பலமாக எதிர்த்தன.
இது தொடர்பாகத் தனது வாதத்தை முன்வைத்த இந்தியா, இவ்வாறானதொரு ஆணையாளர் நியமனம் அவசியமற்றதெனவும், ஐ.நா அமைப்புக்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையே இவ் ஆணையாளரும் மேற்கொள்ள வேவண்டியிருக்கும் எனத் தெரிவித்தது.
இந்த விவாதத்தில் நிறைய உண்மைகள் உண்டு. ஆனால் இதற்குப் பின், சில பொய்யான காரணங்களும் உள்ளன.
பொதுநலவாய அமைப்பால் நியமிக்கப்படும் ஆணையாளர் ஒருவர் குறிப்பிட்ட நாடொன்றின் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக தனது தலையீட்டை மேற்கொள்வதானது, அந்த நாட்டின் தலைமைக்குப் பயங்கரத் தலையிடியாக இருக்கும் என்ற காரணமும் மறைமுகமாக உறுப்பு நாட்டுத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமித்தல் என்ற பரிந்துரைக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதென்பது அதிர்ச்சி தரக்கூடிய விடயமல்ல. ஏனெனில் இந்தியாவில் பல மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது இந்திய ஆதிவாசிகள் மீதான படுகொலைகள், தலித்துக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, காஸ்மீரில் இடம்பெற்ற மிகப் பெரிய மனிதஉரிமை மீறல்கள், மாவோயிஸ்ட்டுக்களுடன் தொடர்புபட்ட மோதல்கள் எனப் பல மனிதஉரிமை மீறல்கள் இந்தியாவில் அரங்கேறியுள்ளன.
பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் அளவுகோல்களின் அடிப்படையில் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பிரபல மனிதஉரிமையாளர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆணையாளர் எவ்வகையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என உறுப்பு நாடுகள் எதிர்பார்க்கின்றன?
இவ் உறுப்பு நாடுகளின் பிறிதொரு 'கைப்பொம்மையாக' இவ் ஆணையாளர் இருக்க வேண்டுமா?
இந்த அடிப்படையில் இவ் ஆணையாளரை தமது 'கைப்பொம்மையாக்க' விரும்பும் நாடுகள் எவையாக இருக்கும்?
அதாவது இவ் ஆணையாளர் பிரிட்டன் மற்றும் கனடாவின் செல்லப்பிள்ளையாக இருப்பாரா அல்லது இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளின் செல்லப்பிள்ளையாக இருப்பாரா? ஒட்டுமொத்தத்தில் இந்த விடயமானது எதனைப் பிரதிபலித்து நிற்கின்றது?
அதாவது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனிதஉரிமை விவகாரம் தொடர்பாக, தீர்மானிக்கும் பொறுப்பு இந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகின்ற போது- இது தொடர்பாக தீர்வை எட்டுவதில் எவ்வாறான சவால்களை பொதுநலவாய அமைப்பு எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை இதன் ஊடாக மிக எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதையே இது பிரதிபலித்துக் காட்டுகின்றது.
இவ்வாறான நிலைப்பாட்டில், உலக நாடுகள் அரசியல் அமைப்புக்களாக இருக்கின்ற காரணத்தினால் 'மனித உரிமைகள்' என்பது அரசியல் பிரச்சினையாக மாறிவருகின்றது.
இது பொதுநலவாய அமைப்பு சந்திக்கின்ற பிரச்சினையாக மட்டும் இருக்கவில்லை. இதேவிதமான பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையும் சந்திக்கின்றது.
ஆகவே, பரந்தளவில் பார்க்கின் பொதுநலவாய அமைப்பு நடந்து கொள்ளும் விதமானது அவமானம் தருவதாகவே உள்ளது.
அடுத்து சிறிலங்கா விவகாரத்தைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பொதுநலவாய அமைப்பு மாநாடு தமக்கு 'வெற்றி’ எனத் தாமாகவே தெரிவித்திருந்தனர்.
அதாவது சிறிலங்கா மீது பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் இதன் மீது ஒருவிதமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட, சிறிலங்கா அதிகாரிகள் தாம் இதில் வெற்றியைப் பெறுவார்கள் என்றே அறிவித்திருந்தனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.
சிறிலங்காவிற்கு எதிராக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவரால் தொடுக்கப்பட்ட வழக்கு அந்தநாட்டு அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டமை சிறிலங்கா தான் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் வெற்றி பெற்றுக் கொள்வேன் என நினைத்ததற்கான முதலாவது காரணமாகும்.
வழக்குத் தொடுத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலே கலந்துரையாடப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் பொதுநலவாய அமைப்பு திறனற்றுக் காணப்பட்டது இரண்டாவது விடயமாகும். இந்த விடயமும் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
மூன்றாவதாக, 2013 இல் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் மேற்கொள்வது தொடர்பில் வழங்கப்பட்ட மீள் உறுதிப்பாடாகும்.
தற்போது நடந்து முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்ட ஆதரவானது மார்ச் 2012 இல் இடம்பெறவுள்ள ஐ.நாவின் மனிதஉரிமை சபையில் சிறிலங்கா எத்தகைய ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் என்பதையே காட்டிநிற்கின்றது.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவிற்குக் காட்டிய அதேவிதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் காட்டினால் சிறிலங்கா அதிலும் வெற்றியைப் பெற்றுக் கொள்ளும்.
ஐ.நாவால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு சிறிலங்கா தொடர்பாகத் தயாரித்த அறிக்கை மூலம் அந்த நாடு தண்டிக்கப்பட்டு விடும் என்ற அனுதாபத்தினால் இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் தமது ஆதரவை வழங்கவில்லை.
மாறாக தமது நாடுகளில் ஏற்பட்ட மனிதஉரிமை மீறல் சம்பவங்களைக் கருத்திற் கொண்டே அவை இவ்வாறு தமது ஆதரவை வழங்குகின்றன.
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடானது இராஜதந்திர ரீதியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்பது தொடர்பில் சில விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, அரசாங்கத்திற்கான 'வெற்றி' என்பது பொதுவாக வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆதரவு சக்திகளை 'தோற்கடித்தமை' என்பதையே கருதுகின்றது.
ஆனால் உண்மையில், வெளிநாடுகளில் செயற்படும் புலிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக ஊடகங்கள் எதிர்மறைச் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், வெளிநாட்டில் செயற்படும் புலிகளுக்கான வெற்றியாகவே இது பார்க்கப்படுகின்றது.
இரண்டாவதாக சிறிலங்காவிற்கு எதிராக தீவிர குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக சிறிலங்காவுக்குள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொருத்தமான நீதி நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் சிறிலங்காவில் நீதியான சமாதானம் ஒன்று நிலைபெற்றிருக்க மாட்டாது.
மூன்றாவதாக, பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையானது நடுநிலைமையற்றதாகவும், சுயாதீனமற்ற விசாரணையாகவும் உள்ளதால் சிறிலங்கா தேசியளவில் கூட இன்னமும் நேர்மைத்தன்மையான விசாரணையை மேற்கொள்ளமாட்டாது என்பதையே குறித்து நிற்கின்றது.
குறிப்பாக, சிறிலங்காவின் இராணுவ வீரர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணையானது நீதித்தன்மையற்றதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்காவதாக, சிறிலங்கா இராஜதந்திர ரீதியில் தனக்கான வெற்றியைப் பெற்றுக் கொண்ட போதிலும் கூட உள்நாட்டில் தற்போதும் மனிதஉரிமை மீறல்கள் தொடரப்படுகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். இவ்வாறான விடயங்கள் சிறிலங்கா அரசாங்கம் மீது கண்டனத்தை மட்டும் மேற்கொள்ளவில்லை.
இவை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ள அதேவேளையில் இவை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தத்தையும் வழங்குகின்றன.
இறுதியில், சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படமாகும்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இந்த ஒளிப்படத்தில் மகாராணியாருக்கு அடுத்ததாக நின்றிருக்க வேண்டும். ஆனால் அந்த ஒளிப்படத்தில் அவரைக் காணவில்லை.
இது உண்மையாயிருந்தால், சனல் 04 தொலைக்காட்சி வெளியிடப்பட்ட ஆவணப்படமானது போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும் என்ற கேள்வி தீவிரமாக எழும்பும்.
அவ்வாறெனின் அந்த 'இராஜதந்திர வெற்றி' முற்றுமுழுதாக 'அவமானத்தில்' முடிவடைந்துள்ளது எனலாம்.
‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘