மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பதற்குப் போராடும் நாங்கள் அதற்காக வேறு உயிர்களை இழக்கக்கூடாது. இவ்வாறு நாடு கடந்த அரசின் சபாநாயகர் பொன். பாலராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த அரசின் ஏற்பாட்டில் இன்று ரொறன்ரோ நகரிலுள்ள கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி. செங்கொடியின் வணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில்,
தமிழினம் இன்று ஒரு புதிய வரலாற்று யுகத்திற்குள் புகுந்து கொண்டிருக்கிறது எனவும் இந்த மூவரின் தூக்குத் தண்டனை மனு நிராகரிப்பானது உறங்கிக் கிடந்த தமிழினத்தை மீண்டும் தட்டியெழுப்பியுள்ளது எனவும் தமிழக தொப்புட்கொடியுறவுகளிற்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லையென்றும் இந்தப் பொன்னான தருணத்தில் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென மன்றாட்டமாகக் கேட்பதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழத்திற்காக தன்னை அற்பணித்துச் செயலாற்றி வருபவருமான திரு. ஈழவேந்தன் அவர்கள் பேசுகையில்,
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் பிறந்த மண். அந்த மண்ணிலே பிறந்த செங்கொடி எப்படி அண்ணாத்துரையால் காஞ்சி பெருமையடைந்ததோ அதே போன்றதொரு பெருமையை அந்த மண்ணிற்குக் கொடுத்து விட்டார் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பிரதிப் பிரதமரான கலாநிதி ராம் சிவலிங்கம் இந் நினைவு நிகழ்வில் பேசுகையில்,
நாடு கடந்த அரசின் ஆழ்ந்த அனுதாபத்தை செல்வி செங்கொடியின் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்ந்த துயரில் மூழ்கிப் போயிருக்கின்ற தமிழக உறவுகளிற்கும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பேசிய தமிழ்த் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரான திரு. துரைராஜா அவர்கள் பேசுகையில்,
விடுதலைப் போராட்டத்தில் பல்லாயிரம் மக்களைப் பலி கொடுத்த நாங்கள் தமிழக உறவுகளை மன்றாட்டமாகக் கேட்பதெல்லாம் உங்கள் உணர்வு எங்களிற்கு தேவை. தயவு செய்து உங்கள் உயிர்களை கொடுக்கும் நிகழ்வுகளை இனியும் நாங்கள் சந்திக்க முடியாது என வேதனை ததும்ப உரையாற்றினார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் பேசிய திரு. துசி துரைரட்ணம் அவர்கள் அங்கு பேசுகையில்,
கனடியத் தமிழர்களின் சார்பில் செங்கொடியின் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டதோடு, மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களுடன் சேர்ந்து கனேடியத் தமிழர்கள் மரண தண்டணை ஒழிப்பை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல, உலகிலேயே நிறுத்தக் குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
நாடு கடந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோ அன்ரனி, சண் உள்ளிட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பல பொது அமைப்புக்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் தங்கள் அஞ்சலியை நேரடியாகச் செலுத்தினர்.
மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியை செல்வி செங்கொடிக்கு உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.