Saturday, 30 July 2011

மனநலம் படிக்கப் போய் மனநிலை தவறிய பிரிட்டிஷ் பெண்!

Ms Jacobs
லண்டன்: மனநலம் குறித்த படிப்பை படித்துவந்த லண்டன் பெண், திடீரென ஒரு நாள் மனநலம் பாதிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் தனது நினைவுகளை இழந்து அவதிப்பட்டார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.

கடந்த 1992-ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது. அவரது மகன் அம்மா என்று அழைத்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை ஒரு சிறுமி போன்று பாவித்தார். எனவே, அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஞாபக மறதி நோய் பாதிக்கும் முன்பு அவர் மன நலம் குறித்த கல்வி படித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த ஞாபக மறதி வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

3 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது இவருக்கு ஓரளவு பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்துள்ளன. ஞாபக மறதியால் தான் பட்ட கஷ்டங்களை அவர் புத்தகமாக எழுதியுள்ளார்.

தனது நோய் முற்றிலும் குணமடைந்தததும் முகத்தை கண்ணாடியில் பார்த்ததாகவும் அப்போது சுருக்கமடைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் தான் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது மகன் தன்னை அம்மா என்று அழைத்த போதுதான் தனது நிலையை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யோஹன் - அத்தியாயம் ஒன்று: விஜய் நடிக்கும் கவுதம் மேனன் படம் அறிவிப்பு!

Yohan: Adhyayam Ondru
நண்பன் படம் முடிந்ததும் விஜய் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர்... கவுதம் மேனன்! படத்துக்குப் பெயர் யோஹன்- அத்தியாயம் ஒன்று!!

இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர். வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கு ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹம்ஸா, பாடலுக்கு தாமரை, கலை இயக்கத்துக்கு ராஜீவன் என கவுதம் மேனனின் பரிவாரம் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறது.

பக்கா ஆக்ஷன் படமான யோஹா, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது!

திருவாரூரில் மறியல் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார்.
அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு பொலிசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.
இதற்கு பூண்டி கலைவாணன் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய பொலிசார் வந்திருந்தனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை பொலிசார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி கிளிண்டன்: பேஷன் நிபுணர் கிண்டல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயோர்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?
ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்

அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது.
அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.
அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.
சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள் அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரீதமான அளவிற்குச் சென்றுள்ளது

ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபடவேண்டும்

வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.
சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.
அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.
கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.
அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.
‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன
நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!
எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,
சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,
இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.
அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.
அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.

இலங்கையில் சுமார் 5000 காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

 
காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்தநிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
குறித்த மனித உரிமைகள் நடவடிக்கையாளரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்கள், அரசியல் செல்வாக்கு காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பே கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கொலையின் பிரதான சந்தேகநபர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தக்கொலை விசாரணையில் காட்டிய முனைப்பை இலங்கை காவல்துறையினர், ஏனைய காணாமல் போனோர் விடயத்திலும் காட்டவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 5653 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.

உலகின் மிகப்பெரிய Remote Control விமானம் (வீடியோ இணைப்பு)

 
NASA வால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய Remote Control விமானத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். இந்த விமானத்தின் பெயர் x-48 B என்பதாகும்.





சொக்லேட்டினால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் (படங்கள் இணைப்பு)

 
சிற்பங்கள் கற்கள் மணல் மற்றும் பல வினோதமான பொருட்களை வைத்து செய்யப்பட்டதை நம்முடைய தளத்தில் பார்த்திருக்கிறோம். அப்படி வினோதமான சிற்பம் தான் இந்த சொக்லேட் சிற்பங்கள்.











இலங்கை ஐ.நாவுக்கு எதிராக பாடல்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இலங்கை அவற்றுக்கு பதிலளிப்பதை விடுத்து தம் தவறை மறைப்பதற்காக பல்வேறு மட்டங்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வருகிறது.

மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறுவதை தட்டிக் கழித்து, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு சர்வதேசம் தடையாக இருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டிவருகிறது.

இந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சனல் 4 தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு எதிராக இலங்கையின் பாடகர் ருக்ஷான் பெரேரா “Shame on You” என்ற தலைப்பில் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

போருக்குப் பின்னர் அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களது அனைத்து காயங்களும் குணமடைந்து வருகின்றது.

மற்றும் ஐ.நாவும், சனல் 4 தொலைக்காட்சியும் நாட்டை பிளவுபடுத்த முற்படும் பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுகின்றன என்ற தொனியில் குறித்த பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் மேலும் கேலிக்குரிய ஒன்றாக மாறிவருகின்றது என்பது தெட்டத்தெளிவு.