சுஸ்மா சுவராஜை சிறீலங்கா அரசாங்கம் தமது நாட்டுக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைத்துள்ள பின்புலத்தில், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை நேரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் உண்மை நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கப்பட்டதுடன், அவரது கொழும்பிற்கான பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் எதிர்காலப் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் சிறீலங்காவிற்கான தனது பயணத்தை இரத்து செய்திருப்பதாக, தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பாரதீய ஜனதாக் கட்சியின் ஏனைய பிரதான தலைவர்கள், சிவ் சேனா கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், வி.எச்.பி (VHP), மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சியின் (CPI) மூத்த தலைவர்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இவர்கள் அனைவரும், தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள ஏனைய மாநிலங்களிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை எதிரொலிக்கச் செய்வதுடன், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரி நிற்கும் தமிழின அழிப்பில் இடம்பெற்ற அனைத்துலக போர்க்குற்ற சுயாதீன விசாரணைக்கு (Independent International Investigation) ஆதரவளிப்பது பற்றி தமது கட்சிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதி அளித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லண்டனில் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி (Nitin Gadkari) உட்பட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியபோது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்தே, தமிழர் பேரவையின் இந்தியாவிற்கான பயணம் அமைந்திருந்தது.
இந்திய அரசியல் தலைவர்களை மட்டுமன்றி அங்குள்ள மனித உரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், ஊடகங்கள், மற்றும் அரசியல் ஆலோசகர்களையும் டெல்லி, கர்னாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சந்தித்து தமிழர் பேரவை பேச்சு நடத்தியிருந்தது.
இந்திய தலைவர்கள் அதிர்ச்சி
சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக அறிந்திராத இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபை, மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர்கள், பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கிய ஆவணங்கள், மற்றும் இன அழிப்புத் தகவல்களைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழின அழிப்பை எடுத்து விளக்கிய அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை பற்றியும், அந்த அறிக்கையில் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான வலியுறுத்தல் உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்புக்களில் அழுத்திக் கூறப்பட்டது.
போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை
சிறுவர்கள், பெண்கள், மூதாளர்கள் உட்பட 40,000 மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்களப் படையினரால் இன அழிப்புச் செய்யப்பட்டதும், 146,679 பேர் காணாமல் போயிருப்பது பற்றி அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை இந்த சந்திப்புக்களில் வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கோரியிருக்கும் போர்;க்குற்ற விசாரணையை அமுல்படுத்துவதற்கு இந்தியாவிலுள்ள பொது அமைப்புக்கள், மற்றும் அரசாங்கத்தின் ஆதரவும் இந்தச் சந்திப்புக்களில் கோரப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்த ஆதரவு இருக்க வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தாயகத்தில் தமிழ் மக்களின் நிலையும், நிலமும்
தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கில் வலுவான சிங்கள படைத்துறை நிருவாகக் கட்டமைப்பின் கீழ் அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள், பௌத்தர்கள் இல்லாத தமிழர் வாழ்விடங்களில் கட்டப்பட்டுவரும் பௌத்த விஹாரைகள், தமிழர் நிலங்களில் சிங்களவர்களின் ஆதிக்கங்களை வலுவடையச் செய்யும் நடவடிக்கைகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
தமிழ் மக்களின் கலாசாரம், அரசியல் அடையாளங்களை திட்டமிட்ட ரீதியில் அழிப்பதன் ஊடாகவும் இன அழிப்புத் தொடந்து வருகின்றமை இந்த சந்திப்புக்களின் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழர் தாயத்தில் இடம்பெறும் இந்த சம்பவங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களும் பிரித்தானிய தமிழர் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்டன.
நன்றி.
பிரித்தானிய தமிழர் பேரவை