Sunday, 23 October 2011

மகிந்தவின் முன்பாகவே விஜய் நம்பியாரைக் கடிந்து கொண்டார் பான் கீ மூன்


சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த மர்சுகி தருஸ்மன்,

“இது ஐ.நாவின் அறிக்கையே, அதற்குக் குறைவானது அல்ல. நிபுணர் குழு ஐ.நா பொதுச்செயலராலேயே நியமிக்கப்பட்டது. எனவே இதனை சிறிலங்கா தொடர்பான ஐ.நா அறிக்கை என்று மட்டுமே கூற முடியும்.“ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நிபுணர் குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பும் தகவலை, சிறிலங்கா அரசுக்குள் முன்கூட்டியே தெரியப்படுத்தாதது குறித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் விஜய் நம்பியார் உள்ளிட்ட தனது அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்கா அதிபர் பான் கீ மூனை சந்தித்த போது, அவரது முன்னிலையிலேயே சக அதிகாரிகளை ஐ.நா பொதுச்செயலர் கடிந்து கொண்டதாக பல தரப்புகள் தமக்குத் தகவல் தந்ததாகவும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

No comments: