Friday, 14 October 2011

மனிதஉரிமை மீறல் விவகாரம் - மகிந்தவுடன் நேரில் பேசுவார் கனேடியப் பிரதமர்


அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் நேரில் பேசுவார் என்று நம்பப்படுகிறது.

பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள கனேடியப் பிரதமர் இந்த விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன் நேரில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாக சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் கூறப்படுவது போல, 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை கனேடியப் பிரதமர் புறக்கணிக்கமாட்டார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கனேடியப் பிரதமர் சிறிலங்காவில் நடைபெறும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறவில்லை என்றும், போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் எட்டப்படாதவிடத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நெருக்கடியானது என்றே அவர் குறிப்பிட்டதாகவும் புரூஸ் லெவி மேலும் விளக்களித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்த மாநாடு நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் பயன்மிக்க தாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அதனை சிறிலங்காவே முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் எதிர்காலத்துக்கு இந்த விசாரணைகள் மிகவும் அவசியம் என்று தாம் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவின் உறவுகள் நெருக்கமடைந்து வரும் நிலையில் பழைய நண்பர்களிடம் இருந்து அது விலகிச் செல்வதை சுட்டிக்காட்டத் தேவையில்லை என்றும் கனேடியத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாரை நண்பராக வைத்திருக்க வேண்டும் என்று முடிவுகளை எடுக்கின்ற எல்லா உரிமைளையும் முதிர்ச்சி பெற்ற நாடான சிறிலங்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள கனேடியத் தூதுவர், ஆனால் ஏதாவது ஒன்று தான் என்ற விளையாட்டு இங்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: