Friday, 14 October 2011

சமாதானம் பேச வந்து சிறிலங்காவுக்கு லியம் பொக்ஸ் ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தாரா? (வீடியோ இணைப்பு)






பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல்- 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக லியம் பொக்சும், அவரது நண்பர் அடம் வெரிற்றியும் ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்காவுக்கு வந்து போனதாகவும், ஒவ்வொரு முறையும் வரும்போதும் லியம் பொக்ஸ் வெரிற்றியை அழைத்து வந்தாகவும், லியம்பொக்சின் விடுமுறைப் பயணத்தில் கூட அவர் சிறிலங்கா வந்ததாகவும் சிறிலங்கா உயர் வட்டாரங்கள் சனல்- 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளன.

சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தவே லியம் பொக்ஸ் சிறிலங்கா சென்றதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.

ஆனால் அடெம் வெரிற்றி ஆயுத பேரம் தொடர்பாக சிறிலக்காவுக்குத் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் செலவிலேயே அங்கு தங்கியிருந்ததாகவும் சிறிலங்காவின் மூன்று உயர்மட்ட வட்டாரங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள மூத்த பிரமுகருடன் கலந்துரையாடும் ஒருவராகவே வெரிற்றி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா அரசின் அந்த முக்கிய பிரமுகர், அடம் வெரிற்றியுடன் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகள், விமான உதிரிப்பாகங்களைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் சிறிலங்கா உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடல் எப்போது நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றும் மற்றொரு உயர்மட்ட வட்டாரம் சனல்-4 தொலைக்காட்சியிடம்
கூறியுள்ளது.

மற்றொரு உயர்மட்ட வட்டாரம், அடம் வெரிற்றி 2000ம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு வந்ததாக கூறியுள்ளது.

அத்துடன் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அளவில் நற்பெயரைத் தேடிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அனைத்துலக அளவில் சிறிலங்காவின் பெயர் மோசமாக கெட்டுப் போயுள்ள நிலையில், மேற்கு நாடுகளில் உள்ள பொதுமக்கள் உறவு நிறுவனங்களுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் பெரும் தொகைப்பணத்தை வழங்கியுள்ளனர்.

இதுபற்றிய கலந்துரையாடல்களில் வெரிற்றி பங்கேற்றதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக சனல்-4 கூறியுள்ளது.

பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனல்-4 வெரிற்றியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் சனல்-4 தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சிறிலங்கா அரசுடன் எத்தகைய உறவு உள்ளது என்பது குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரித்தானியா நிழல் பாதுகாப்பு அமைச்சர் எம்மா றெனோல்ட்ஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: