Thursday, 8 September 2011

புலம்பெயர்ந்து வாழ்வோர் காணி உறுதிகளை புதுப்பிக்க வேண்டும் சிறிலங்கா அரசு அறிவிப்பு


புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்மக்கள் வடபகுதியில் உள்ள தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை மீளப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

அச்சம் காரணமாகவோ அல்லது பசுமையான வாழ்வு தேடியோ தமது உடைமைகளையும் சொத்துக்களையும் கைவிட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழ் மக்கள் வடபகுதியில் அவர்களது காணிகள் அமைந்துள்ள பிரதேச செயலகங்களுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் படிவங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி தமது காணி உறுதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பப் படிவங்கள் தொடர்பாக சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு விரிவான விசாரணைகளை நடத்தி காணி உரிமையாளர்களிடம் புதிய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வடபகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களின் பிரதேச செயலகங்களிலும் படிப்படியாக காணிகள் தொடர்பான விரிவான விசாரணகள் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பி.எம்.பி.உதயகாந்தா தெரிவித்துள்ளார்.

'தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் கீழுள்ள நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள காணிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். காணிகளுக்கான புதிய உறுதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் பெற்றுக் கொள்ள முடியும்' என்றும் உதயகாந்தா மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கரைச்சி பிரதேச செயலர் பிரிவு, வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுஞ்கேணி பிரதேச செயலர் பிரிவு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலர் பிரிவு போன்றவற்றிலுள்ள காணிகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமையாளர்கள் தமது காணிக்கான புதிய உறுதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூரணப்படுத்தி அவற்றைக் கையளிக்க முடியும் என்றும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும்- உடனடியாக சிறிலங்காவுக்கு வரமுடியாதவர்கள் இது தொடர்பாக bimsaviya.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் உதயகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: