Thursday, 8 September 2011

மருத்துமனை மீதான தாக்குதல் சவீந்திர சில்வா


சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த "Lies Agreed Upon," என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில் நேற்று திரையிடப்பட்டுள்ளது.


இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட- வெள்ளைக்கொடி விவகாரத்தில் பாலித கொஹன்னவின் பங்கு என்ன என்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர் நம்பியாரிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

இதுபற்றி தாம் நம்பியாரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

ஆனால் அல்-ஜெசீராவுக்கு அவர் அளித்துள்ள செவ்வி ஒன்றில், அப்போதைய வெளிவிவகார செயலர் பாலித கொஹன்னவுடன் பேசுமாறு கூறியிருந்தாகவும் இன்னர் சிற்றிபிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் நேற்று பாலித கொஹன்னவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது இராணுவத்தில் தனது பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விடுதியில் நம்பியாரைச் சந்தித்துப் பேசியதை ஒப்புக்கொண்ட கொஹன்ன, அந்த உரையாடலை நினைவுபடுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் 58வது டிவிசன் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு, தனது 58வது டிவிசன் பற்றி அந்த அறிக்கையில் கூறப்படவில்லை என்று முதலில் பதிலளித்திருந்தார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.

இதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் 55வது, 58வது டிவிசன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்த பந்தியை உரத்து வாசித்துக் காண்பித்தார்.

இதையடுத்து மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, அந்த அறிக்கை தவறானது என்றும், அது 53வது டிவிசன் என்றும் கூறியதுடன் 55வது டிவிசன் அப்போது வேறாரு இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது, அது ஐ.நா அறிக்கை அல்ல என்று பாலித கொஹன்ன வாதிட்டுள்ளார்.

No comments: