Sunday, 29 January 2012

இலங்கையை சிக்க வைக்க ஊடகவியலாளர்கள் இரகசிய சதி திட்டம்!- அரசாங்கம் குற்றச்சாட்டு.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருபகுதியும் மேலதிக நேர வேலையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக ஊடகவியலாளர்களும் கூட இந்த இரகசியச் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும், வடக்கு, கிழக்கிலும் அண்மைக் காலத்தில் இடம்பெறும் போராட்டங்கள், இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் அரசாங்கம் விமர்சித்துள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறுவதற்கு முன்னர், அடுத்த சில வாரங்களுக்கு இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அரச வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.
ஐதேக, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களே அரசாங்கத்திற்கு எதிராக இந்த இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாக அரச தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments: