கான்ட்ராக்டரை மிரட்டிய வழக்கில் கைதாகியுள்ள, மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த ராவணன் மீது, சென்னையில் மேலும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அவர் மீது, மேலும் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால், "ஏழரை' துவங்கிவிட்டது.
பாலியல் புகாரும் வருது...: கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பதுங்கி, எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த ராவணன், கடந்த ஐந்தாண்டுகளில், கொங்கு மண்டல பொறுப்பாளராக மாறிய பின் தான், தன் அரங்கேற்றத்தை துவங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாலியல் புகாரும் இவர் மீது வருவதாகக் கூறப்படுகிறது. பதவியை நாடி வரும் சிலரிடம் இவர், கேட்கும் பரிகாரமே வேறு என்று எதிர்தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பதவிக்காக தன்னை நாடி வந்த சில பெண்களை இவர், மிரட்டி பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவையும் விரைவில் வெளியாகும்.
ராவணனின் அட்டகாசம்: சசிகலா கும்பலில் அனைவருமே அட்டகாசம் செய்தனர் என்றாலும், அவர்களை விட ராவணன் ஒரு படி அதிகம் என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன், வேட்பாளர்கள் பட்டியல் முடிவு செய்வது முதல், ஆட்சியை பிடித்த பின், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் தேர்வு, தூக்கியடிப்பு உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தார். கூடுதலாக, டெண்டர் போன்ற பல விவகாரங்களில் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி வந்தார். உளவுத் துறை போலீசார் இதை கண்காணித்து, விவரங்களை சேர்த்து வந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழி, சசிகலாவால் தடுக்கப்பட்டிருந்தது.
புகார்களுக்கு வழிகிடைத்தது: தற்போது, உளவுத் தகவல்களும், ராவணன் குறித்த தகவல்களும்முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, தனிப்படை போலீசார், ராவணனை குறி வைத்து தூக்கிச் சென்று விசாரணை நடத்தி, அனைத்து தகவல்களையும் கறந்தனர். அதன் பின் தான், அண்மையில் நடந்த அதிகாரிகள், அமைச்சர்கள் களையெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவணனால் பாதிக்கப்பட்ட பலர் மோசடி, கொலை மிரட்டல், அபகரிப்பு உள்ளிட்ட புகார்களை ஆங்காங்கே கொடுத்து வருகின்றனர்.
ராவணன் கைது: இப்படி கொடுக்கப்பட்ட, ஒரு மிரட்டல் வழக்கில் தான் நேற்று முன்தினம், ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். காரமடையைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டரை கடத்தி, 10 லட்சம் ரூபாய் பறித்துக் கொண்டதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சூலூர் பகுதியில் ஜீப் மீது லாரி மோதிய வழக்கிலும் ராவணன் மீது புகார் வந்துள்ளது.
ரூ.1 கோடி மோசடி: இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்த, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ராவணன் உள்ளிட்டோர் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
திருப்பூரில், ஆர்.கே.ஐமே பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. அவர் கொடுத்திருக்கும் புகாரில் உள்ள விவரப்படி; ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இவர், கரூர் மற்றும் திருச்சி பகுதியில் மணல் குவாரி எடுக்க விரும்பினார். இது தொடர்பாக, ராவணனின் உறவினர் சத்யா என்பவர் மூலம், ராவணனின் உதவியாளர் ராஜாவை அணுகி, அவர் மூலம் ராவணனிடம் பேசி, குவாரி லைசென்ஸ் பெற்றுத் தர கோரினார். அதற்கு, ராவணன் தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளனர்.
மூன்று பிரிவுகளில் வழக்கு: தொடர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரத்தில், சென்னை நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் பகுதியில் உள்ள, ராவணன் உறவினர் வீட்டில், பணத்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு இடங்களிலும் மணல்குவாரி லைசென்ஸ் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்கவில்லை. பணத்தையாவது திருப்பித் தரும்படி, ராவணன் உள்ளிட்டோரை சந்தித்து கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன், கிருஷ்ணமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, புகாரில் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில், ராவணன், உறவினர் சத்யா மற்றும் ராவணன் உதவியாளர் ராஜா ஆகியோர் மீது, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
துவங்கியிருச்சு ஏழரை: இந்த வழக்கு தொடர்பாக ராவணனை கோர்ட் அனுமதி பெற்று தங்கள் வசம் வைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளனர். அடுத்து, யார் மீது வழக்கு பாயுமோ என்ற அச்சத்தில் சசிகலா தரப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ராவணன் மீது தற்போது இரண்டு வழக்குகள் உள்ள நிலையில் மேலும் சிலர் புகார் அளித்துள்ளதால், ஏழரை துவங்கிவிட்டது. விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற கருத்தும் நிலவுகிறது.
வசூல் புகாரும் சேருகிறது...! ராவணன் மீது வடவள்ளியில் நிலம் அபகரிப்பு, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலர் செல்வராஜ் விபத்தில் பலியானது, திருப்பூரில் நில மோசடி என, பல்வேறு புகார்களும் வழக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த வழக்குகள் எதிலுமே அவருக்கு, நேரடித் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வழக்குகளின் எதிரொலியாக, ராவணன் தரப்பால் பாதிக்கப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட வேறு யாரிடமிருந்தாவது புகார் வரும் என்ற எதிர்பார்ப்பு, போலீசாரிடம் உள்ளது. தமிழகத்திலுள்ள குவாரிகள், கிரானைட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் ராவணனின் பெயரில் பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் பரவலான புகார்கள் உள்ளன.


No comments:
Post a Comment