Friday, 15 July 2011

ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன்


இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:


இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக் கொண்டு சேர்க்க வேண்டும். பெரும்பாலான படங்களை பொறுத்தவரை, வெளியான ஒரு வாரத்துக்குள் அதிக ரசிகர்களை ஈர்ப்பது அவசியம். வர்த்தக ரீதியான வெற்றியே படத்தின் அளவு கோலாக கருதப்படுகிறது. ஆனால், இந்த வரையறைக்குள் தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருபோதும் வந்ததில்லை.




ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே அவருக்கு கிடையாது. அவருடைய படத்துக்கு அவரே மிகப்பெரிய விளம்பரம். ஒரு முறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, எதற்காக படத்தை பிரபலப்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்' என என்னிடம் கேட்டார். மேலும், அது உங்களை நீங்களே விற்பது போன்றது என்றும் கூறினார். நாங்கள் இருவருமே சிரித்தோம். பின்னர் அவரிடம் விளக்கி கூறினேன். அவருக்கு அந்த அவசியம் கிடையாது.

மிகச்சிறந்த விற்பனை சிந்தனை உள்ள நிபுணர்கள், 24 மணி நேரமும் மேற்பார்வை, கண்காணிப்பு, ஆய்வு என உழைக்கின்றனர். மக்களிடம் திரைப்படங்களை எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தனை செய்கின்றனர். வேகமான இந்த உலகில் அனைத்துமே விரைவாக நடைபெற வேண்டும். புதிய சிந்தனை இல்லாமல் வளர்ச்சியோ, மாற்றமோ கிடையாது. எனவே, புதிய தலைமுறைகளை நான் வாழ்த்துகிறேன்.




திரைப்படத்தை பொறுத்தவரை முதல் வாரம் மட்டுமே முக்கியமானது. இரண்டாவது வாரத்தில் அடுத்த படத்தின் வெளியீடு குறித்து மக்கள் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். டி.வி., ரேடியோ, இன்டெர்நெட், செல்போன் என அனைத்து இடங்களிலும் திரைப்படங்கள் பரவி விட்டன. எனவே, நேரத்துக்கு நாம் அடிபணிந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

No comments: