Monday, 5 September 2011

தெற்காசியாவைப் பாதுகாத்தோம்! ஆனால் கொலைக் களத்தில் சிக்கியுள்ளோம்!! மகிந்த ஆதங்கம்


பொறுப்புக் கூறவேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இவற்றின் பெரும்பாலானவை குண்டுத் தாக்குதல்களில் இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பானவை எனவும் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மனிதாபிமான நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் சிறந்த நட்புறவினை கட்டியெழுப்ப முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தெற்காசியாவை பயங்கரவாத்தில் இருந்து பாதுகாத்து பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடென்ற பெருமையுடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனால் தற்போது தாம் கொலைக்களத்தில் சிக்கியுள்ளதாகவும் கொழும்பில் ரொட்றி கழகத்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான தெற்காசிய மாநாட்டில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு எம்மிடம் மிகக்குறைந்த வளங்களே இருந்ததன. பொருளாதார மற்றும் யுத்த நிலையில் பலம் பெற்றிருந்தாலும் பொதுமக்களை படுகொலை செய்யும், மனிதகுல அழிப்பு ஆயுதங்களை தயாரிப்போரின் ஆதரவை பயங்கரவாத முறியடிப்பின் போது பயன்படுத்தவில்லை.

நாட்டிலிருந்த பயங்கரவாத்தை தோற்கடித்த தேசம் என்ற வகையிலும் தெற்காசியாவை பயங்கரவாத்திலிருந்து பாதுகாத்துள்ளோம் என்ற வகையிலும் பெருமையடைகிறோம்.

ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக எம்மிடமிருந்த பொருளாதார மற்றும் ஆயுத பலத்தினை விடவும் தற்போது அதிகம் கொண்டிருந்த போதிலும் கொலைக்களத்தில் சிக்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நாட்டில் ஸ்திரமான சமாதானத்தை தற்போது நிலைநாட்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

இதனைத் தவிர பொறுப்புக் கூறவேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாகவும் இவற்றின் பல குரல்கள் குண்டுத் தாக்குதல்களில் இடம்பெற்ற பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பானவை.

மனிதாபிமான நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் சிறந்த நட்புறவினை கட்டியெழுப்ப முடியுமா எனவும் ஜனாதிபதி அப்போது கேள்வியெழுப்பினார்.





No comments: