Monday, 5 September 2011

அமெரிக்காவில் விசித்திரம் பாம்பை கடித்தவர் கைது

நியூயார்க்: ‘பாம்பு கடித்தவர் சாவு’ என்பதற்கு பதில், தவறாக படித்திருப்போமோ என்று மறுபடி தலைப்பை படித்திருப்பீர்கள். ஆம். அமெரிக்காவில் பாம்பை கடித்து ரத்த காயம் ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நம்மூரில் பாம்பை கண்ட துண்டமாக அடித்து துவைத்தாலே யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்க, அது கடிப்பதற்கு முன் பாம்பை மனிதன் கடிப்பதெல்லாம் தப்பா... என்று ‘லஞ்சம் வாங்கினால் தப்பா, இதுக்கெல்லாமா கொல்வாங்க?’ என்று ‘இந்தியன்’ படத்தில் நிழல்கள் ரவி கேட்பதுபோல பரிதாபமாக கேட்கத் தோன்றுகிறதா?

கலிபோர்னியாவை சேர்ந்த டேவிட் செங்க் (54) கடித்தது, பக்கத்து வீட்டு செல்லப் பிராணியான மலைப் பாம்பை. வழக்கமாக பக்கத்து வீட்டை எட்டி பார்க்காத டேவிட், நேற்று முன்தினம் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் செல்லப் பிராணியை ஒரு நிமிடம் கொஞ்சி விட்டு தருகிறேன் என்றார்.

சரி என்று 4 அடி நீள மலைப் பாம்பை அதன் எஜமானர் எடுத்து கொடுத்தார். பாம்பும் எஜமானரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பை கடித்துக் குதறினார் டேவிட். அவரிடம் போராடி பாம்பை காப்பாற்றிய பக்கத்து வீட்டினர், உடனடியாக அதை கால்நடை டாக்டரிடம் காட்டினர். டேவிட் செங்கை மாட்டிவிட போலீசுக்கு போன் போட்டனர்.

வாயில் ரத்தம் சொட்ட நின்ற டேவிட் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ‘‘மது மயக்கத்தில் இருந்ததால் என்ன நடந்ததென்று தெரியவில்லை. எனக்கு பாம்பு என்றால் பிடிக்காது. ஒருவேளை அதனால் கடித்திருக்கலாம்’’ என்றார்.

டேவிட் கடித்ததால் வயிறு கிழிந்த பாம்பை மருத்துவமனையில் அட்மிட் செய்த டாக்டர், 10 தையல்கள் போட்டு சில நாட்கள் ரெஸ்ட் எடுக்க (எஜமானரிடம்) வலியுறுத்தினார்.

No comments: