Monday, 5 September 2011

சாக்கடையில் வீசப்பட்ட ஆண் குழந்தை:நெஞ்சை உருக்கும் சம்பவம்


ஆண் சிசுவை, சாக்கடையில் வீசிச்சென்ற இருவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பண்ணாரியம்மன் நகரில் நேற்று நடந்த சென்ற சிலர், அதிகளவு ரத்தம் இருந்ததை பார்த்து, திடுக்கிட்டனர் ரத்த துளிகள் ரோட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடை வரை இருந்தன.

அங்கு, எட்டிப்பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிறந்து, குறைந்த நேரமே ஆகியிருந்த, அழகான தும்பை பூ போல் இருந்த ஆண் குழந்தை, சாக்கடைக்குள் இறந்த நிலையில் கிடந்தது.

தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தை சாக்கடையில் கிடந்ததை கண்ட பலரும் வேதனைப்பட்டனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர். குழந்தையை பார்க்கும் தைரியமான மனம் கூட இல்லாமல் பலர் கண்களை மூடிக்கொண்டனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், "நேற்று மதியம் 2.30 மணிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பைக்கில் வந்தனர். ரோடு சந்திப்பில் நின்றிருந்தனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக உள்ளதால், ஐந்து நிமிடம் கூட இருவரும் நிற்கவில்லை.

அப்போதே இருவரும் பைக்கில் ஏறி வேகமாக சென்று விட்டனர். அவர்கள் தான் குழந்தையை வீசியிருக்க வேண்டும்' என்றனர். "குழந்தை உயிருடன் சாக்கடையில் வீசப்பட்டதாகவும்' சிலர் கூறினர். "பிரசவமே ரோட்டில், சாக்கடையோரத்தில் தான் நடந்தது' என்றும் சிலர் தெரிவித்தனர்.

கள்ளத்தொடர்பு, திருமணமாகாமல் தாய்மையானது, இளம் வயது காதல் என ஏதோ ஒரு பிரச்னையால், பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசியிருக்கிறார், அந்தப்பெண்.

ரூரல் போலீசார், சாக்கடையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கல் மனம் படைந்த பெண் மற்றும் உடன் வந்த ஆண் யார், ஏன் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன் இதே பகுதியிலுள்ள குப்பை தொட்டியில், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: