Tuesday, 27 September 2011

வாதப்பிரதிவாதங்கள், குறுக்கு விசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த பான் கீ மூன் - மகிந்த சந்திப்பு


ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பு வாதப்பிரதிவாதங்கள், குறுக்குவிசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த சந்திப்பாகவே நடந்திருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் பதிலளித்துள்ளார்.

போர் முடிவுக்குள் வந்த பின்னரும் வடக்கில் சிறிலங்காப் படையினரை அதிகளவில் நிலை கொள்ள வைத்திருப்பது ஏன் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமே சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் புறம்பாக அபிவிருத்தி செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாலேயே, சிறிலங்காப் படையினரை அந்தப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச காரணம் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுக்கிறது.

அதேவேளை, கடந்த ஆண்டு பான் கீ மூனைச் சந்தித்த போது, வெளியிடப்பட்ட அறிக்கையில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு நடவடிக்கை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மேறகொள்ளப்படும் முயற்சிகள், தமிழ்க்கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் தொடர்பாகவும் பான் கீ மூனிடம் சிறிலங்கா அதிபர் எடுத்த்து கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு தெரியாமல் நிபுணர்குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலரிடம் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐ.நாவின் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ஐ.நா பொறிமுறை மீதான நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தொடர்பாடல் குறைபாடுகள் இருந்ததை பான் கீ மூன் ஒப்புக்கொண்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இறுக்கமானதாகவும் � வாதப்பிரதிவாதங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தே சிறிலங்கா அதிபர் தன்னுடன் ஆறு பேரை அழைத்துச் சென்றுள்ளதாக கருதப்படுகிறது.

அதேவேளை ஐ.நா பொதுச்செயலரும் அதற்குத் தயாராக தனது ஆலோசகர்கள், அதிகாரிகளுடன் சந்திப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா அதிபருடன் ஜி.எல்.பீரிஸ், பாலித கொஹன்ன, ஜாலிய விக்கிரமசூரிய. லலித் வீரதுங்க, காமினி சேனாரத், சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாதது முக்கியமானது என்றும் நியுயோரக் தகவல் ஒன்று கூறுகிறது.

ஐ.நா பொதுச்செயலருடன் அவரது அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோவும், பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கலந்து கொண்டதாகவே பந்துல ஜயசேகரவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நவி பிள்ளையின் மனிதஉரிமைகள் ஆணைய நியுயோர்க் பிரதிநிதி ஐவன் சிமோனோவிக், பாலியல் வன்முறைகள், மற்றும் மோதல் குறித்த சிறப்பு ஆலோசகர் மாகொற் வோல்ஸ்ரோம் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்ட போதும் அதுபற்றிய தகவலை இந்தச் செய்திக்குறிப்பில் மறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments: