![]() |
| ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் முடிவுக்கு வர இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதைத் தடுப்பது பற்றிய கவலையுடன் சிறிலங்கா பிரதிநிதிகள் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானங்களை முன்வைப்பதற்கான காலக்கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதும், சிறிலங்கா பிரதிநிதிகள் கலக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு முதல் நாளான திங்கட்கிழமையே கொழும்பு திரும்பியிருந்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை கொண்டுவர கனேடிய பிரதிநிதிகள் குழு ஜெனிவாவில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அது தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிகழ்ச்சி நிரலில் சேர்க்க கனேடிய பிரதிநிதிகள் முயற்சித்தனர். இதுபற்றிக் கலந்துரையாட கனேடிய பிரதிநிதிகள், ஜெனிவாவில் இருந்த ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த எதிர்பாராத நகர்வை அடுத்து, ஜெனிவாவில் இருந்த சிறிலங்கா அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிசை அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அமைச்சர் மகிந்த சமரசிங்க கேட்டுக் கொண்டார். அவரும் அந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றி, சிறிலங்கா விவகாரம் குறித்து முன்கூட்டியே தீர்மானம் எடுக்கக் கூடாது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை பொறுத்திருக்குமாறும் கேட்டுள்ளார். தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் வியாழக்கிழமை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அத்தகைய தீர்மானம் ஏதும் சமர்ப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தாம் கருதியதாக சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறியுள்ளார். ஆனாலும் கடைசி நேரத்திலும் அதிர்ச்சியை சந்திக்கலாம் என்று கருதியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஜெனிவாவில் உள்ள மகிந்த சமரசிங்க தொடர்ச்சியாக வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார். நியுயோர்க்கிலுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும் இது தொடர்பான உடனுக்குடன் தகவல்களை தெரியப்படுத்தி வருகின்றனர். சிறிலங்காவுக்கான பரப்புரையில் மகிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிசும் இணைந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
Tuesday, 27 September 2011
ஜெனிவாவில் கலக்கத்துடன் நாட்களை எண்ணும் சிறிலங்கா பிரதிநிதிகள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment