Thursday, 25 August 2011

நாவாந்துறை இராணுவ முகாமை பொங்குதமிழ் பாணியில் தாக்க முயற்சி


நாவாந்துறை இராணுவ முகாமையும், காவல்துறை நிலைகளையும் தாக்க முயன்ற போதே 102 பேரைத் தாம் கைது செய்ததாக சிறிலங்கா படைகளின் யாழ்ப்பாணத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

படையினரை குவித்து யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், காவல்துறைக்கு உதவியாக அந்தப் பகுதியில் கால்நடை மற்றும் வாகன ரோந்துகளை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இதனை பொங்கு தமிழ் பாணியிலான தாக்குதல் என்று வர்ணித்துள்ளார்.

நாவாந்துறை இராணுவ முகாமுக்குள் பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், வாள்களுடன் நுழைந்து படையினரைத் தாக்க முற்பட்ட போதே பொதுமக்களை கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, நாவாந்துறையில் சிறிலங்காப் படையினரே பொல்லுகள், துவிச்சக்கரவண்டி சங்கிலிகள், போன்றவற்றினால் தம்மைத் தாக்கியதாக, படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: