Monday, 30 January 2012

மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி


மைத்துனியின் கள்ளக் காதலை கண்டித்த வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்ற மனைவி, அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (35). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (31). நேற்று முன்தினம், பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேகர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இறந்தார்.

பெரியபாளையம் போலீசில் சுஜாதா புகார் கொடுத்தார். அதில் உடல் நிலை சரியில்லாத எனக்கு பம்ப் ஸ்டவ்வில் சேகர் கஞ்சி காய்ச்சினார். அப்போது தீ விபத்து ஏற்பட்டு, உடல் கருகி சேகர் இறந்தார்ÕÕ என கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஸ்டவ் வெடித்து சேகர் இறக்கவில்லை. சுஜாதாவும் சிலரும் சேர்ந்து அவரை கொளுத்திவிட்டனர் என போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுஜாதா, அவரது அப்பா சுகா ரெட்டி, அக்கா மேகலா ஆகியோரை போலீசார், காவல் நிலையத்துக்கு நேற்றிரவு  அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் தெரியவந்த தகவல் குறித்து போலீசார் கூறியது: குடும்ப தகராறு காரணமாக சுஜாதாவின் அக்கா மேகலா, கணவரை பிரிந்தார். அவர் சுஜாதா வீட்டில் தங்கியிருந்தார். அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் சேட்டு என்பவருடன் மேகலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதை சேகர் தட்டிக் கேட்டுள்ளார். சேட்டுவையும் எச்சரித்துள்ளார். மனைவி உள்பட உறவினர்கள் அனைவரும் சேகருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சேகர், மனைவியை அடித்திருக்கிறார். ‘உன் அக்கா மேகலா, என் வீட்டில் இருக்கக் கூடாது என கூறியிருக்கிறார்.

இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுஜாதாவும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து போதையில் இருந்த சேகரை, வெளியே தூக்கிச்சென்று அங்குள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ளனர். பின் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டனர். பாதி உடல் எரிந்த அவரை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் இறந்ததும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, சமையல் செய்தபோது தீப்பிடித்து சேகர் இறந்துவிட்டார் என புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, சுஜாதா, மேகலா, சுகா ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சேட்டுவை தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை மனைவியே எரித்துக் கொலை செய்திருப்பது ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: