தீவிரவாத அமைப்புகளும் அவற்றை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதலும் என்ற நோக்கத்தில் "தேசிய தீவிரவாத ஒழிப்பு அமைப்பு" ஒன்றை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
அந்த அமைப்பு தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக அறிக்கை தயாரித்துள்ளது. 19 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை வெள்ளை மாளிகை இப்போது முதன் முதலாக வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தெற்கு ஆசிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அமைப்புதான் 2008ம் ஆண்டு மும்பையில் பெரும் தாக்குதலை நடத்தியது. அதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த அமைப்பை ஒடுக்க உலக நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பால்தான் அச்சுறுத்தல் உள்ளது.
இந்த அமைப்பை ஒடுக்க மற்ற நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தெற்கு ஆசிய நாடுகளின் பலம், உறுதித்தன்மையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதுபோல் ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளின் பலத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறது.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முடியும்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து அல்கொய்தா அமைப்பை ஒடுக்கிவிட்டாலும் அந்த அமைப்புடன் தொடர்புடைய சில தீவிரவாத அமைப்புகள் இன்னும் சில நாடுகளில் பரவியுள்ளன.
அந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகள் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அது பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment