Saturday, 24 September 2011

சிறிலங்காவுடனான ஆறுநாள் போர்ப்பயிற்சியை இன்றுடன் இடைநிறுத்துகிறது இந்தியா


இந்திய - சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி நான்காவது நாளான இன்றுடன் திடீரென நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்றுடன் இந்தப் போர்ப்பயிற்சி முடிவுக்கு வரவிருப்பதாக சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சண்டேரைம்ஸ் ஒன்லைன் தகவல் வெளியிட்டுள்ளது.

திருகோணமலையில் துறைமுக, கடல்சார், மற்றும் கடற்கொள்ளை முறியடிப்பு சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுவது குறித்து இருநாட்டுக் கடற்படைகளும் இணைந்து கடந்த 19ம் நாள் தொடக்கம் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இருநாடுகளினது கடற்படைகளையும் சேர்ந்த 16 போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் இந்தப் பாரிய போர்ப்பயிற்சி நாளை மறுநாள் 24ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திடீரென நான்காவது நாளுடன் இந்தப் பயிற்சி நிறைவடைவதாக சிறிலங்கா அதிகாரி கூறியுள்ள போதும், அதற்கான காரணம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

அத்துடன் இராமேஸ்வரம் மீனவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடியாகப் போர்ப்பயிற்சியை நிறுத்தக் கோரியும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்ப்புகள் காரணமாக போர்ப்பயிற்சி இடைநடுவில் கைவிடப்படுகிறதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை.

No comments: