Sunday, 25 September 2011

சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது!- ஐ.நா. கூட்டத்தில் ஜனாதிபதி உரை (வீடியோ இணைப்பு)







கடந்த கால கசப்பான அனுபவங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66ம் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கப்படும்.

மக்களின் மனதில் ஏற்பட்ட துன்பியல் உணர்வுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் படையினர் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் மிகவும் சொற்ப அளவிலான படையினரே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.


யங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

உலகில் சிறிய நாடுகள் உதாசீனம் செய்யப்படக் கூடாது, அவ்வாறான நாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மனித உரிமை என்னும் பெயரில் நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கியூபாவிற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும், நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் போது ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் எதிர்கால சந்ததியினர் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு சர்வதேச ரீதியான தீர்வுகளை வழங்க முடியாது, அது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது- மகிந்த

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியூயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார்.

உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார்.

இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல், சர்வதேச நிதிக் கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

No comments: