Sunday, 25 September 2011

திருகோணமலை வர்த்தகக் கண்காட்சியில் போராயுதங்கள் � பொதுமக்கள் அதிர்ச்சி (படங்கள் இணைப்பு)


திருகோணமலையில் நடைபெற்று வரும் ஈஸ்ட் எக்ஸ்போ -2011 வர்த்தகக் கண்காட்சியில் சிறிலங்காப் படையினரின் போர்த்தளபாடங்களே பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய உற்பத்தி, கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி நேற்று தொடக்கம் நடைபெற்று வருகிறது.

சுமார் 500 வரையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை நேற்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார்.

வர்த்தகக் கண்காட்சி என்று கூறப்பட்டுள்ள போதும் சிறிலங்காப் படைகள் அரங்குகளை அமைத்து தமது போர்த்தளபாடங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா விமானப்படை பெல் மற்றும் எம்.ஐ 24 தாக்குதல் உலங்குவானூர்திகளையும், பி.ரி-6 பயிற்சி விமானத்தையும் காட்சிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா கடற்படை படகுகள் மற்றும் போராயுதங்களைக் கொண்ட அரங்குகளை அமைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவம், 85,மி.மீ, 122 மி.மீ,130 மி.மீ நீண்டதூர ஆட்டிலறிகள், பல்குழல் பீரங்கி, போர் டாங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான சுடுகலன்கள், படைத்தளபாடங்களையும் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளது.

அத்துடன் பொதுமக்களுக்கு மிரட்சியூட்டும் வகையில் படைத்தளம் போன்ற அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தக கண்காட்சியில் சிறிலங்காப் படையினர் அரங்குகளை அமைத்து ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது இதனைப் பார்வையிட்ட பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.





No comments: