Friday, 2 September 2011

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 3 மகள்மாரையும் கௌரவ கொலை செய்த தந்தை

லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை "த டெய்லி மெயில்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மிஸ்ரடா நகரில் கடாபியின் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது, தொடர்ந்து இரு வார காலமாக அந்நகர் லிபியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கடாபியின் படையினர், நூற்றுக்கணக்கான மக்களை மனிதக் கவசங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

மிஸ்ரடா நகரின் புறநகரப் பகுதியிலுள்ள தொமினியா எனுமிடத்தில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது, 17 வயது மற்றும் 18 வயதுடைய மூன்று சகோதரிகள் கடாபியின் ஆதரவுப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையை தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட பாரிய அவமானமாகக் கருதிய அவர்களது தந்தை, தனது கையாலேயே தனது மகள்மார் மூவரையும் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் மேற்படி நகரிலுள்ள முன்னணி மனித உரிமைக் குழு மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இரு சிறுவர்களை பீரங்கிகள் மீது பலவந்தமாக அமரச் செய்த கடாபியின் படையினர் அச்சிறுவர்களது குடும்பத்தினரிடம், "நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள். நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், நீங்களும் இறப்பீர்கள்'' என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன் கடாபியின் படையினர் ஆரம்பப் பாடசாலையொன்றை தடுப்பு நிலையமாக மாற்றி 14 வயது மதிக்கத்தக்கவர்கள் உள்ளடங்கலான சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடாபி பாலியல் வல்லுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் தனது படையினருக்கு பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை விநியோகித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அதே சமயம் கடாபி தனது படையினருக்கு மிஸ்ரடா நகரிலுள்ள பொதுமக்களை பட்டினியால் வாடச் செய்ய உத்தரவிட்டமை தொடர்பான ஆவணப் பிரதிகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிராந்திய மனித உரிமை குழுவினர் அறிக்கையிட்டுள்ளனர்.

கடாபியின் படையினர் மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர்களை தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் கடாபியின் படையினர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டுள்ளது.

No comments: