Monday, 11 July 2011

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசகரை கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கிறது அமெரிக்கா



சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியுயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர்.

அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப்.கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும், அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.

இந்தநிலையிலேயே லெப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக லெப்.கேணல் பற்றிக் ஜே. ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே. ஸ்கூலரை நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையார் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: