Thursday, 30 June 2011

கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு

சென்னை:"சட்டசபைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சி அமைப்புகளை மாற்றி அமைப்பது' என, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. ஆட்சியில் இருந்தபோது, இலவச திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியும், வெற்றி பெற முடியாதது, தி.மு.க., தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தபோது, பெரும்பாலான மாவட்டச் செயலர்கள், மக்களிடையே மட்டுமின்றி, கட்சித் தொண்டர்களிடமும் வெறுப்பை சம்பாதித்திருப்பது தெரிந்தது.குறுநில மன்னர்கள்போல் செயல்பட்ட, மாவட்டச் செயலர்கள் தங்களின் ஆதரவாளர்களைத் தவிர மற்றவர்களை, வளர விடாமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

தி.மு.க.,வில் அமைச்சராக இருப்பவரை விட, மாவட்டச் செயலராக இருப்பவருக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம்.அவருக்கு அடுத்தபடியாக நகரச் செயலர், ஒன்றியச் செயலர் போன்றோருக்கு மதிப்பு அதிகம். இதை பயன்படுத்தி, பலர் சட்ட விரோதமாக சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். இப்பதவிகளுக்கு, குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் வர முடியாது என்ற நிலையும் உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாவட்டச் செயலர்களின் அதிகாரங்களை பரவலாக்கவும், தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை நீக்கவும், கட்சி அமைப்பை மாற்றி அமைக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.அதற்கு முன்பாக, கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:குவிந்திடும் கட்சிப் பணிகளை இனிதே நிறைவேற்ற, கட்சி சட்ட திட்டங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை, பொதுக்குழு அனுமதி பெற்று செய்திட, தலைமைக்கழகம் சார்பில், சில சட்ட திட்டங்களை, திருத்த வேண்டியுள்ளது.இது தொடர்பான கருத்துரு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருத்து என்னவென்றால், தற்போதுள்ள மாவட்டக் கழகத்திற்கு பதிலாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், லோக்சபா தொகுதி குழுக்கள் அமைக்கப்படும். அவற்றின் கீழ் சட்டசபைத் தொகுதி குழுக்கள் பணியாற்றும். இது தொடர்பான கருத்துக்களை, பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 15ம் தேதிக்குள், கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை குறைப்பதற்காக, கட்சித் தலைமை இம்முடிவை எடுத்துள்ளது. தற்போது, கட்சியில், 35 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். லோக்சபா தொகுதி குழுக்கள் அறிவிக்கும்போது, தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலர் வீதம், கூடுதலாக நான்கு மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படுவர்.நகரச் செயலர், ஒன்றியச் செயலர் பதவி அப்படியே நீடிக்கும் எனத் தெரிகிறது. மாவட்ட அமைப்பு மட்டும் மாற்றப்பட்டு, லோக்சபா தொகுதி குழு அமைக்கப்படும். அவர்களுக்கு கீழ், சட்டசபை தொகுதி குழுக்கள் பணியாற்றும். இதன் மூலம் புதிதாக பலர் பதவிக்கு வர வாய்ப்புள்ளது.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments: