Saturday, 30 July 2011

இலங்கையில் சுமார் 5000 காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

 
காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்தநிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
குறித்த மனித உரிமைகள் நடவடிக்கையாளரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்கள், அரசியல் செல்வாக்கு காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பே கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கொலையின் பிரதான சந்தேகநபர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தக்கொலை விசாரணையில் காட்டிய முனைப்பை இலங்கை காவல்துறையினர், ஏனைய காணாமல் போனோர் விடயத்திலும் காட்டவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 5653 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.

No comments: