Tuesday, 13 September 2011

நவநீதம்பிள்ளையுடன் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கடும் மோதல்!


ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நடிவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதேவேளை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் பின்புலத்தில் மனித உரிமைகளைப் பேணத் தவறிய நாடுகளுக்கு சிறிலங்கா ஒரு உதாரணம் என்று நவநீதம்பிள்ளை தனது உரையில் குற்றம்சாட்டினார்.

பாதுகாப்பு விடயங்களை சிறிலங்கா முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முப்பதாண்டுகளில் சிறிலங்கா தனியே தீவிரவாதத்தினால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச்சட்டத்தை நீக்கினால் மட்டும் போதாது என்றும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்டங்களையும், தடுப்புக்காவலையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை முன்னதாக உரையாற்றிய சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா மீது நீதியற்ற குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அனைத்துலக சமூகம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments: