Sunday, 18 September 2011

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்:


முகூர்த்த நேரத்திற்கு, வெளிநாட்டில் இருந்து மணமகன் வந்து சேரவில்லை. இருப்பினும், நிச்சயித்தபடி, மணமகனின் சகோதரி திருமண சேலை கொடுத்து திருமணம் நடந்தது.

கேரளா கொல்லம் மாவட்டத்தில் பந்தளம் அருகே கிடங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் ராஜி. இவருக்கும் நூறுநாடு பகுதியைச் சேர்ந்த சதானந்தன் மகன் அனிஷ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அனிஷ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தை குளநாடு பகவதி கோவிலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனிஷ் பணியாற்றும் நிறுவனம் கடைசி வரை அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது.

அவரது பெற்றோர் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் முறையீடுகள் வைக்கப்பட்டும் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இந்நிலையில், இரு வீட்டாரும் பதட்டத்தில் இருந்தனர்.

மணமகனுக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், மணமகன் வரும்போது வரட்டும், திருமணத்தை நிச்சயித்தபடி நடத்தலாம் என, பெரியவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நிச்சயித்த நாளில் திருமணத்திற்கு இரு வீட்டு உறவினர்களும் திரண்டனர். மணமகனுக்காக அவரது சகோதரி மணமகளுக்கு திருமண சேலை கொடுத்து திருமணத்தை நடத்தினார்.

விடுமுறை கிடைத்து மணமகன் தாயகம் திரும்பியதும் முறைப்படி, மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தலாம் என, முடிவானது.

திருமணத்திற்கு பின் மணமகள், மணமகன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

No comments: