பரமக்குடியில் இன்று நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
போலீஸார் மீது கூட்டத்தினர் நடத்திய பெரும் தாக்குதலில், சென்னை துணை ஆணையர் செந்தில்வேலன் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் தூத்துக்குடியிலிருந்து கிளம்பினார். அப்போது வல்லநாடு பகுதியில் அவரை போலீஸார் தடுத்து தூத்துக்குடி கொண்டு சென்றனர். அவர் கைதும் செய்யப்பட்டார்.
இதையடுத்து பரமக்குடியில் கூடியிருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். ஐந்து முக்கு சாலையில் சாலை மறியலில் குதித்த அவர்கள் போலீஸார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாட்டில்களையும், கற்களையும் வீசி போலீஸாரைத் தாக்கினர். மேலும், அந்தப் பகுதி வழியே வந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.2 போலீஸ் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். அப்படியும் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து கண்ணீப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் கூட்டம் கலையாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் கூட்டத்தினர் கலைய மறுத்து தொடர்ந்து தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பரமக்குடியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
துணை ஆணையர் காயம்
முன்னதாக கூட்டத்தினர் நடத்திய தாக்குதலில் சென்னையிலிருந்து பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துணை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி டிஎஸ்பி மற்றும் சில போலீஸார் படுகாயமடைந்தனர்.
மதுரையிலும் துப்பாக்கிச் சூடு-ஒருவர் காயம்
இதேபோல மதுரையிலும் கலவரம் வெடித்தது. அங்கும் போலீஸாருக்கு போராட்டக்காரர்கள் கட்டுப்பட மறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.
தென் மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த சம்பவங்களைத் தொடர்நது தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.


No comments:
Post a Comment