Tuesday, 20 September 2011

திருகோணமலையில் பொலிஸ் பதிவு! பயத்தால் திணறும் தமிழ் மக்கள்!!


 
இலங்கையில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரசாங்கத் தரப்பு அறிவித்திருந்தும் மறைமுகமான ஒரு யுத்த சூழ்நிலையைத் தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றது ஆளும் தரப்பு.

அந்த வகையில் தமிழர் பிரதேசங்களில் இராணுவப் பதிவு, பொலிஸ் பதிவு, பாஸ் நடைமுறை எனப் பல தரப்பட்ட பதிவுகளால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதற்காக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக அண்மைக் காலமாக கிறிஸ் பூதம் என்ற மர்ம மனிதன் பீதியைத் தமிழ் மக்கள் மீது திணித்து அதன் மூலம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கிறது அரசு.

இது இவ்வாறிருக்க தற்போது திருகோணமலை மொறவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுப் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்கள் சிறுபான்மையினம் என்ற முத்திரை குத்தி அவர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் ஒரு நோக்கத்தோடு செயற்பட்டு வந்த அரசாங்கம், மேற்குலகின் ஆதரவைப் பெறும் நோக்கோடு அவசர காலச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்திருந்தது.

ஆனால் அவசர காலச் சட்டத்தை நீக்கி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மெருகூட்டியிருக்கும் அரசு, தமிழ் மக்களின் தலைமேல் வைக்கப்பட்ட சிறுகல்லை எடுத்து விட்டுப் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்துள்ளதே தவிர எந்தவொரு சட்டமும் நீக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை.

சொந்த நாட்டு மக்களைச் சோதனையிட்டு, அடையாள அட்டை பார்த்துப் பயணிக்க விடுவதுமட்டுமன்றி வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருவது அந்த மக்களை அடியோடு அழிக்கும் ஒரு நயவஞ்சகத் திட்டத்தின் அத்திபாரமாகவே இது அமைகின்றது.

இதேவேளை திருகோணமலையில் பொலிஸ் பதிவுகளை மேற்கொண்டு வருவதால் அப் பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளதுடன் கிராம சேவையாளர்களின் பணியினை ஏன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments: