Thursday, 1 September 2011

உயிர்ப்பிச்சை கேட்டு மகிந்தவின் காலில் வீழ்ந்த ரூபவாகினி ஒளிப்பதிவாளர்

சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும், தனது உயிரைக் காப்பாற்றுமாறும் கோரி சிறிலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபன ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரின் காலில் வீழ்ந்துள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, ரூபவாகினி ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம போர்முனைச் செய்தி சேகரிப்புக்காக சிறிலங்காப் படையினருடன் தங்கியிருந்தார்.

அவரே சிறிலங்காப் படையினரின் போர்க்குற்றக்காட்சிகள் பலவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையிலேயே தன்னைக் கொலை செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் திட்டமிடப்பட்டுள்ளதாக கப்டன் ஜெயவீர என்ற இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரிடம் கூறியுள்ளார்.
கப்டன் ஜெயவீரவும் சமரன்குமார ராமவிக்கிரமவுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதுடன், விடுதலைப் புலிகளின் மடிக்கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை போர் முனையில் இருந்து கடத்திச் சென்ற போது இவர்கள் இருவருமே சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்களக் காட்சிகள் எதையும் தான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கவில்லை என்று கூறியுள்ள சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரிடம் அழுது கொண்டே, தனது உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவரைத் துன்புறுத்த வேண்டாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோருக்கு மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

No comments: